சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகளில் தவெக தோல்வி என்று உறுதியானால், உடனடியாக வெளிநாடு செல்ல ஏதுவாக விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு பின் ஒவ்வொரு கட்சியினரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாயில் இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளார். அதேபோல் திமுக, அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் திட்டம் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்த பின் விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார்.
ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னரும் கூட விஜய் இதுவரை விடுமுறைக்கு புறப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், விஜய்யும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளர். ஆனால் அது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று என்று தெரிய வந்துள்ளது.
இந்த திட்டம் தேர்தல் முடிவுகளை பொறுத்தே செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவில் தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால், அந்த திட்டத்தை விஜய் கைவிட்டுவிடுவார் என்று கூறுகின்றனர். ஒருவேளை தவெக தோல்வி அடைந்தால், உடனடியாக விஜய் ஆஸ்திரேலியா பறந்துவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



