
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னை பனையூர் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நீங்கள் என்னுடன் இருப்பீர்களா?” என விஜய் நேரடியாகவே வேட்பாளர்களிடம் கேட்டுள்ளார். குறிப்பாக, மற்ற கட்சிகளிலிருந்து வந்து த.வெ.க.வில் இணைந்த 118 வேட்பாளர்களில் பலரை விஜய் இதுவரை நேரில் சந்தித்ததில்லை.
இந்த நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் ‘குதிரை பேரம் (horse trading)’ போன்ற சூழல்கள் உருவாவதைத் தவிர்க்கவும், வேட்பாளர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் இக்கேள்வியை அவர் முன்வைத்ததாகத் தெரிகிறது.
வெற்றி பெற்றவர்களை பெரிய கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்கும் என்று எண்ணுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்று தெரிகிறது
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய விஜய், “நமது கட்சியின் மீதான கோபத்தினால் வெளியிடப்பட்ட கணிப்புகள் இவை; இவற்றை யாரும் பொருட்படுத்த வேண்டாம்” எனத் தொண்டர்களுக்கு தைரியம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்கே மையங்களில் இருக்குமாறும், வெற்றிச் சான்றிதழைப் பெற்றவுடன் நேராக பனையூர் வர வேண்டும் என்றும் விஜய் கட்டளையிட்டுள்ளார்.


