
வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில் உயர்த்தி நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், சாலையோர வியாபாரிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இன்றைய விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ.3,071.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 2246.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 3,237 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது
உணவகங்கள், சிறிய ஹோட்டல்கள், டீ கடைகள், பஜ்ஜி – போண்டா கடைகள் மற்றும் சாலையோர உணவங்கள் என பல தரப்பினருக்கும் இந்த கமர்சியல் எல்பிஜி சிலிண்டர்கள் தான் உயிர் நாடி. இவர்களால் மத்திய அரசு கூறுவது போல் பைப்லைன் கனெக்ஷன் பெற முடியாது என்பதால் எல்பிஜி சிலிண்டர்களை தான் அதிகம் நம்பியுள்ளனர்.
இவர்களை நம்பி தான் பல கோடி மக்கள் உள்ளனர், வேலைக்கு செல்வோர் முதல் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வரையில் பலரும் இந்த சிறிய உணவங்களை நம்பி தான் உள்ளனர். இட்லி கடை முதல் பிரியாணி கடை வரை சிலிண்டர்களில் தான் இயங்கி வருகிறது.
ஒரு சிலிண்டருக்கு ரூ.993 விலை உயர்வு என்பது இவர்களின் மாதாந்திர செலவை பெரிய அளவில் அதிகரிக்கும். இது நேரடியாக உணவு பொருட்களின் விலை உயர்வாக மாறி சாமானிய, நடுத்தர மக்களை தான் பாதிக்கும்.
சிறு உணவகங்கள் ஏற்கெனவே சிலிண்டர் விநியோகம் சரிவர இல்லாத காரணத்தால், முழுமையாக இயங்க முடியாமல் குட்டிக்கரணம் அடித்து வருகிறது. பலர் கள்ள சந்தையில் இருந்து தான் சிலிண்டர் வாங்கி வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர். பிளாக்கில் சிலிண்டர் விலை வாங்கும்போது 2-3 மடங்கு அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை வாங்கவில்லை என்றால் உணவங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், முடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
சிலிண்டர் விலை உயர்வு காரணமாகவே உணவக உரிமையாளர்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள 993 ரூபாய் விலை உயர்வு பெரும் தாக்கத்தை உணவு சந்தையில் ஏற்படுத்தும். இந்த பாதிப்பு உணவகங்கள் மட்டும் அல்லாமல் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற ஆன்லைன் ஆர்டரிலும் விலை உயர்வு தலைதூக்கும். இது வரும் நாட்களில் தான் மக்களுக்கு புரிய வரும்.


