ரூ. 252 கோடி ஆள் இல்லா விமானம்! 8வது முறையாக நடவடிக்கை!

அமெரிக்காவின் அதி நவீன ஆள் இல்லா விமானத்தை 8வது முறையாக ஏமன் ஆயுதப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. MQ-9 Reaper என்று பெயரிடப்பட்ட இந்த ஆள் இல்லா விமானம் 50 ஆயிரம் அடி உயரத்தில், 24 மணி நேரமும் தொடர்ந்து பறந்து, உளவுத் தகவல்களை சேகரித்து அனுப்பும் வல்லமை படைத்தது. இதன் மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்திய மதிப்பில் சுமார் 252 கோடி ரூபாய்.இந்த விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் மிசல்ஸ்கள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆக்கிரமிப்பு ஊடகமான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், ஈரானிடம் இருந்து பெறப்பட்ட 358 என்று பெயரிடப்பட்ட மிசல்ஸ்கள் மூலம் இந்த தாக்குதலை ஏமன் படைகள் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
இந்த 358 வகை மிசல்ஸ்கள், தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டவை. இந்த வகை மிசல்ஸ்களை ஈரான், ஏமனுக்கு அனுப்பும் போது, நடுக்கடலில் வைத்து, அமெரிக்க போர்க்கப்பல்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதே போல் ஈராக்கில் இருந்து செயல்படும் துணை ராணுவப் படைகளுக்கும் இந்த ஆயுதத்தை ஈரான் அனுப்பி வருகிறது.
எனினும் ஏமன் ஹவுத்திப் படைகள் இதுகுறித்து குறிப்பிடும் போது, பல முக்கிய ஆயுதங்களை சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டதாகவும், எந்த வெளிநாட்டின் ஏஜெண்டாகவும் ஏமன் செயல்பட வில்லை என்றும், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, காசா மக்களுக்காக தங்களது ஆயுதப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளன.