
விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்ட ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் லீக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவே படத்தை இணையதளத்தில் லீக் செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்காக பல்வேறு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் குரல் கொடுத்தனர். அந்த பிரச்சனைக்கு தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. அதற்குள் அடுத்த பிரச்சனை வெடித்தது.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஜனநாயகன் படம் திடீரென இணையதளத்தில் லீக் ஆனது.ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் லீக் ஆனது தொடர்பாக இதுவரை மொத்தம் 9 பேர் கைதாகியுள்ளனர். பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மாநில சைபர் க்ரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஜனநாயகன் படம் வெளியாக வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


