
தமிழ்நாடு அரசியல் களத்தில் குழப்பம் தொடர்கிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்து என்ன என்பதில் தொடர்ந்து குழப்பம் இருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் ஆளுநரிடம் அதிகாரம் என்ன.. பல நாட்கள் எந்தவொரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அப்போது என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விகள் எழத் தொடங்கி உள்ளன
தற்போது விஜய்யின் தவெக 107 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து அவர் காட்டும் 112 முதல் 118 வரையிலான நம்பர் நிலையானது தானா.. அவரால் நிலையான ஆட்சியை தர முடியுமா என்பது குறித்து ஆராயும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது
ஒருவேளை சட்டமன்றத்தில் எந்தக் கட்சியாலும் ஒரு நிலையான ஆட்சியை வழங்க முடியாது என ஆளுநர் கருதினால், அவர் விதி 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யலாம். இருப்பினும், கடைசிக்கட்ட முயற்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு முன்பாக பல வழிகள் குறித்தும் ஆளுநர் பரிசீலனை செய்வார். இப்போது விஜய் தரப்பு 112 என்ற நம்பரை சொன்னாலும், ஆளுநர் மாளிகை அதீத எச்சரிக்கையாக இருக்கிறது.
ஒருவேளை ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அது கவிழ்ந்தால் ஏற்படும் அரசியல் குழப்பத்தைத் தவிர்க்கவே ஆளுநர் தரப்பில் இந்த எச்சரிக்கை உணர்வு இருப்பதாக கூறப்படுகிறது
எனவே, இப்போது தமிழக அரசியலில் இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த 2 நாட்கள் ரொம்பவே முக்கியம்! ஆளுநர் மாளிகை சொல்லப்போகும் அந்த ஒரு பதில் தான் கோட்டையில் யார் அமரப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும். இதேபோல் இழுபறி நீடித்தால் தமிழ் நாடு ஆளுநர் யோசிக்காமல் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


