
மகாராஷ்டிர மாநிலத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து, தர்பூசணி சாப்பிட்ட நான்கு பேர் அடுத்தடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியாத சூழலில், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மும்பை பைதோனி பகுதியிலா அப்துல்லா டொகாடியா என்பவரது வீட்டில் உறவினர்கள் சூழ மகிழ்ச்சியான இரவு உணவு உபசரிப்பு நடந்துள்ளது. மொத்தம் 9 பேர் அமர்ந்து, இரவு 10:30 மணி அளவில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்து உறவினர்கள் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால், நள்ளிரவு 1:00 மணியிலிருந்து 1:30 மணிக்குள் அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் மற்றும் மகள்களான இரண்டு ஆயிஷா, ஜைனப் ஆகிய நான்கு பேர் மட்டும் தர்பூசணிப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் தான் ஏப்ரல் 26 அதிகாலை 5:30 மணி அளவில், தர்பூசணி சாப்பிட்ட அந்த நான்கு பேருக்கும் கடும் வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டு, பின்னர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரியாணி சாப்பிட்ட மற்ற 5 உறவினர்களுக்கு ஏதும் ஆகாத நிலையில், நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் மட்டும் பலியானது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தர்பூசணியில் எதாவது கலக்கப்பட்டிருந்ததா அல்லது பிரியாணிக்கும் தர்பூசணிக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்வினையா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன
கோடைக் காலம் தொடங்கிவிட்டதால், குளிர்ச்சிக்காக நாம் வாங்கும் பழங்கள் மற்றும் வெளி உணவுகளில் அதீத கவனம் தேவை. இறைச்சி உணவுகளைச் சாப்பிட்ட உடனே பழங்கள் அல்லது பால் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஒரு உணவுப் பொருளை இன்னொரு உணவுப் பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், ஏதேனும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.


