வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் உள்ளிட்ட புகார்கள் காரணமாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என அதிகாரிகள் மத்தியில் தகவல் பரவியுள்ளது.
கோவை மாவட்டத்தில் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவும் தொகுதிகளில் ஒன்று கோவை தெற்கு. இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில், தற்போதைய வடக்கு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் திமுகவினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, அதிமுக தரப்பில் நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாகவும், பறக்கும் படையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள் வசம் தரப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை ஊழியர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.பணம் விநியோகம் போன்ற குற்றச்சாட்டுகளால், 2021ல் செந்தில் பாலாஜி – அண்ணாமலை நேருக்கு நேர் மோதிய அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோவை தெற்கு தொகுதி தேர்தல் நிறுத்தம் தொடர்பாக எந்த வித அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


