உலகம்

மூதாட்டியின் நேர்மையை கண்டு அதிர்ந்த யூசுப் அலி! பாடம் கற்ற தொழில் அதிபர்!

மூதாட்டியின் நேர்மையை கண்டு வியந்த யூசுப் அலி…
தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என நெகிழ்ச்சி…

நேர்மை இருந்தால் மட்டுமே எந்த தொழிலிலும் முன்னேற முடியும் எனத் தெரிவித்துள்ளார் பிரபல லூலூ மாலின் அதிபரான யூசுப் அலி. தனது தாய், தந்தை, தாத்தா உள்ளிட்ட பலரும் தனக்கு நேர்மையை போதித்த நிலையில், ஒரு மூதாட்டி, அதைவிட அதிகமாக கற்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.அந்தச் சம்பவத்தை உணர்ச்சி பொங்க எடுத்துக் கூறியுள்ளார். அவரது தாய், தந்தை இருவரும் 2001ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து, அவர்களது உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

தொழிலில் உச்சத்தை தொட்டு வந்த யூசுப் அலிக்கு, தனது தாய் மற்றும் தந்தையர் ஒரே நாளில், விபத்தில் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே பல நாட்கள் ஆகியுள்ளது. இதனால் யாரையும் பார்க்க மனமில்லாமல் அறையில் முடங்கிக் கிடந்துள்ளார் யூசுப் அலி. இந்தச் சூழலில் யூசுப் அலியின் வீட்டிற்கு வந்த ஒரு மூதாட்டி, அவரை பார்க்க வேண்டும் என பாதுகாவலர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் யூசுப் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தான் மிகுந்த மன உலைச்சலில் உள்ளதால், யாரையும் சந்திக்க விரும்பவில்லை. அந்த மூதாட்டிக்கு என்ன வேண்டுமோ, அதனை கொடுத்து, அனுப்பிவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்களும், அந்த மூதாட்டியிடம் உங்களுக்கு என்ன வேண்டும், பணமா அல்லது வேறு எதுவும் வேண்டுமா எனக் கேட்டுள்ளனர். ஆனால் அந்த மூதாட்டி தனக்கு எதுவும் வேண்டாம் அவரை பார்க்க வேண்டும், பார்க்காமல் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க, அந்த இடத்திற்கு யூசுப் அலி வந்துள்ளார்.

அப்போது, தனது சுருக்கு பையில் இருந்து, ஒரு தங்க வளையலை எடுத்து யூசுப் அலியின் கையில் கொடுத்த மூதாட்டி, இது உங்களது தாயார் சபியாவிற்கு சொந்தமானது. எனது மகள் திருமணத்திற்காக, அவர் எனக்கு கடனாக கொடுத்து, அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்யச் சொன்னார். தற்போது, நான் அடகில் இருந்து மீட்டு விட்டேன். அவரிடம் கொடுக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். அவருக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த வளையல் உங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, யூசுப் அலியின் கையில் வளையலை கொடுத்துள்ளார். அந்த மூதாட்டியைப் பார்த்து, கண்ணீர் வடித்து, தனது தாயாரின் நினைவாக, அதனை வைத்துக் கொண்டதாக யூசுப் அலி குறிப்பிட்டுள்ளார்.

அந்த மூதாட்டி நினைத்திருந்தால், அந்த வளையலை வைத்துக் கொண்டிருக்கலாம். எங்களுக்கு வளையல் கொடுக்கப்பட்டதே தெரியாது. தெரிந்தாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை. ஆனாலும் வாங்கி கடனை நேர்மையாக கொடுக்க வேண்டும் என்று நினைத்த அந்த மூதாட்டி எனக்கு மிகப்பெரிய படிப்பினை. அவர் கற்றுத் தந்த நேர்மையையும் எனது வளர்ச்சிக்கு ஒரு காரணம் நிகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் யூசுப் அலி.


===========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button