ஆயில் கப்பல் தகர்ப்பு – ஏமன் படையின் இஸ்ரேல் எதிர்ப்பு நடவடிக்கை!

காசா மீதான அத்துமீறல்களை கண்டித்து ஹவுத்திப்படை புதிய அதிரடித் தாக்குதல்…
எண்ணெய் கப்பல், நடுக்கடலில் தகர்ப்பு…
இஸ்ரேல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எண்ணெய்க் கப்பலை ஹவுத்திக்கள் தாக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. சீறிப் பாய்ந்து செல்லும் ஆளில்லா போர்ப்படகு ஒன்று எண்ணெய்க் கப்பல் மீது மோதி, தாக்குதல் நடத்தும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
லைபீரியா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல், தங்களது இஸ்ரேல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு உடன்படாததால், தங்களது உத்தரவை மீறிச் சென்றதால், தாக்கியதாக ஹவுத்திப்படை அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் அந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த எண்ணெய் டாங்கிகள் சேதம் அடைந்து, கடலில் எண்ணெய் கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் கப்பலில் இருந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் போர்ட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வந்த அந்த கப்பல், தொடர்ந்து செல்லாமல், மீண்டும் வடக்கு திசைக்கே திருப்பி விடப்பட்டதாகவும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு எந்தக் கப்பலும் செல்ல முடியாது என ஏமன் ஹவுத்திப்படைகள் அறிவித்துள்ளன. அவர்களுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் கடற்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும், தங்களது நடவடிக்கைகளை ஏமன் படைகள் தொடர்ந்து வருகின்றன.
====