உலகக் கோப்பை கால்பந்து போட்டி – மதுவிற்கு தடை விதித்த சவுதி அரேபியா!

சவுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 2034 ஆம் ஆண்டின் FIFA உலகக் கோப்பை தொடரை சவுதி அரேபியா நடத்துகின்றது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் பிரிட்டன் தூதர், இளவரசர் காலித் பின் பந்தர் அல் சவுத், பேசினார்.
அப்போது, சவுதிக்கு உலகக் கோப்பையை காண வரும் ரசிகர்கள் தங்கள் நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும், இதனையொட்டி, ஹோட்டல்கள், ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் மது விற்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சிகள் நிரம்பியதாக உலகக் கோப்பை போட்டி இருக்கும்.
அதே நேரம் மது மட்டும் இருக்காது. சவுதியில் இருந்து நீங்கள் சென்ற பிறகு நீங்கள் மது அருந்திக் கொள்ளலாம். ஆனால் சவுதியில் அனுமதி இல்லை. 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மது தேவையில்லை என நாங்கள் நினைக்கிறோம். என்றார்.அப்போது, மது இல்லாமல் தான் ரசிகர்கள் போட்டியை காண வேண்டுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த சவுதி தூதர், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பண்பாடு உள்ளது. எங்கள் பண்பாட்டிற்கு உட்பட்டு, யாரையும் நாங்கள் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆனால் யாருக்காகவும் எங்கள் பண்பாட்டை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. ஏன் மது இல்லாமல் வாழ முடியாது என சவுதி தூதர் கேள்வி எழுப்பினார்.ஓரினச் சேர்க்கைக்கு மரண தண்டனை வரை சவுதி வழங்கும் நிலையில், ஓரினசேர்க்கையாளர்கள் இந்த போட்டியை காண அனுமதிக்கப்படுவார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த சவுதி தூதர், இது சவுதி நடத்தும் போட்டி அல்ல. சவுதியில் நடைபெறும் போட்டி மட்டுமே. எனவே அவர்கள் போட்டியை காண்பதற்கு மட்டும் வரலாம் எனத் தெரிவித்தார்.2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை கத்தார் நடத்திய போதும், மது குறித்த விவாதங்கள் எழுந்தது. அந்தப் போட்டியில் மதுவிற்கு தடை விதிக்க கத்தார் பல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு FIFA அமைப்பு ஒப்புக் கொள்ளவில்லை. கடுமையாக முரண்டு பிடித்தது. அப்படி இருந்தும், ஸ்டேடியத்தில் மதுவிற்கு தடை விதித்து வெற்றிக்கொடி நாட்டியது கத்தார்.தற்போது, சவுதியும் அதே சாட்டையை கையில் எடுத்துள்ளது.