உலகம்

இரட்டைக் குழந்தைகள், ஒரு கால், ஒரு குழந்தையின் கை, அனைத்தையும் இழந்த பெண் – அல் ஜெசிரா நேர்காணல்!

காசா பெண்கள் ஒவ்வொரு நாளும் படும் துயரங்கள்…
உலகத்தையே உலுக்கி வரும் அல் ஜசீராவின் நேர்காணல்…

காசாவில் நடைபெறும் சம்பவங்களில் சில மட்டுமே வெளி உலகத்திற்கு அம்பலமாகி வருகிறது. அந்த வகையில் பெய்ட் அல் லெஹியா என்ற பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நேர்காணல் கல் நெஞ்சங்களையும் கறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில், தனது இரட்டை குழந்தைகள், தாய் உள்ளிட்ட பலரை இழந்துள்ளார் 32 வயது பெண் மர்வா அபு சைதா. எஞ்சிய ஒரே ஒரு மகனின் கையும் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணின் ஒரு காலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த பேட்டியை சுருக்கமாக பார்க்கலாம்.

தாக்குதல் நடத்தப்பட்ட போது, எனது கால் துண்டாகி, சிறிய தோல் மூலம் தொங்கிக் கொண்டிருந்தது. நான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன். அங்கு படுக்கைகள் இல்லை. தரையில் என்னை போட்டார்கள்.
பக்கத்தில் எனது சகோதரரின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்கொண்டிருந்தது. அவர் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டிருந்தார்.

மருத்துவர்கள் எனது தந்தையின் நெஞ்சை அழுத்தி, அவருக்கு மீண்டும் சுவாசம் திரும்ப, தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் அவரது உடலில் இருந்து ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. கிழிந்து தொங்கிய உடல்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அது யாருடைய உடல் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

எனது குடும்பத்தில் பலரும் இறந்திருப்பார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. வலியால் துடித்த நான் மருத்துவர்களிடம் சிகிச்சைகாக வலியால் கதறிக் கொண்டிருந்தேன். வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து, என்னை தூங்க வையுங்கள் என அவர்களிடம் கெஞ்சினேன்.

அதுவும் முடியாவிட்டால் என்னை கொன்றாவது விடுங்கள். என்னால் முடியவில்லை என கதறினேன். அங்கு எனது அத்தை இருந்தார். அவரிடம் எனது தாயாருக்கு என்ன ஆனது என்று கேட்டேன். அவர் தான் எனது முதுகெலும்பு. எனது குழந்தைகள் எங்கே எனக் கேட்டேன். அவர் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டார். எனது காலும், எனது குழந்தைகளும் சொர்க்கத்திற்கு சென்று விட்டன. ஒரு நாள் நான் அங்கு அவர்களை சந்திப்பேன். எனக்கான இடம் சொர்க்கத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது.

எனது குழந்தை அவர்களை என்ன செய்தது. இதனை நியாயப்படுத்த முடியுமா? எனது குழந்தைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அங்கிருந்து யாரையும் கடத்தி வரவில்லை. அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை.
இவ்வாறு அந்த தாய் கண்ணீர் மல்க அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஒவ்வொரு நாளும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது 2 கால்களை இழக்கின்றன. கடந்த 10 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் குழந்தைகளின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் யூனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button