யார் இந்த சீசிங் ராஜா?

A+ கேட்டகிரியில் இருந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியில், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இவரது பின்னணி குறித்து பார்க்கலாம்.சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 5 கொலை வழக்குகள் மற்றும் 7 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்தார்.ஆந்திர பிரதேச எல்லையில் பதுங்கி இருந்த போது, இவரை கைது செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். அவரிடம் இருந்து, சில துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவரை அக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு போலீசாரை தாக்கி விட்டு, தப்ப முயலும் போது, அவரை எண்கவுண்டர் செய்ததாகவும், இதில் காயம் அடைந்த அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சீசிங் ராஜா, ஆரம்பத்தில் வங்கி ஒன்றின், வாகன பறிமுதல் பிரிவில் வேலை செய்துள்ளார். அதாவது கடன் கட்டாமல், உள்ள வாகனங்களை தூக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.பிறகு சமூக விரோதிகளுடன் சேர்ந்து, கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டுள்ளார். சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். 2 முறை ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை தொடர்ந்து போலீசார் ரவுடிகளுக்கு எதிரான தீவிர வேட்டையை தொடங்கினார். 375 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 153 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் எண்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.தற்போது, சீசிங் ராஜாவும் எண்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். இது சமூக விரோதிகள், ரவுடிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் போலி எண்கவுண்டர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.