
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டும் ஐ.ஏ.எஸ் தம்பதி…
500 ரூபாய் மட்டுமே செலவு செய்து எளிமை திருமணம்…
இந்தியாவில் கூலித் தொழிலாளிகள் கூட கடன் வாங்கி, லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். அந்த அளவுக்கு ஆடம்பரம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் அம்பானி குடும்பத்தினர் 5 ஆயிரம் கோடி செலவு செய்து, திருமணம் செய்தனர். இது குட்டி பணக்காரர்களின் கர்வத்தை தூண்டி, அவர்களும் கடன் வாங்கியாவது, பிரமாண்ட திருமணத்தை செய்ய வேண்டும் என சபதம் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் போதிய வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட, மக்களிடம் தேவையற்ற செலவுகளை குறைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சலோனி சித்தானா, ஆஷிஷ் வசிஸ்த் தம்பதி 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து எளிமையான திருமணத்தை செய்து கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில், பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கான நீதிமன்ற கட்டணமான 500 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரும் எளிய பின்னணியைக் கொண்ட முதல் தலைமுறை அரசு ஊழியர் ஆவர்.
ஆஷிஷ் வசிஸ்த் ஐ.ஐ.டி. ரூர்க்கேவில் படித்தவர். சலோனி சித்தானா மருத்துவர் ஆவார். இருவரும் ஐ.ஏ.எஸ் பயிற்சி கல்லூரி சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் பேசப்பட்டாலும், இருவரும் சமூக வலைதளங்களை விட்டு விலகியே உள்ளனர்.
=====