“இஸ்ரேலை எதிர்க்க அரபு நாடுகளின் உதவி தேவையில்லை” ஏமன் தலைவர் திட்டவட்டம்!

இஸ்ரேலை எதிர்க்க அரபு நாடுகளின் உதவி தேவையில்லை…
ஈரான் தனித்து இஸ்ரேலை எதிர்கொண்டு வெற்றி பெறும்…
ஏமன் படைத் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி திட்டவட்டம்…
ஏமன் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி, அந்நாட்டு ஊடகத்தில் வெளியிட்டுள்ள உரையில் கூறியுள்ளதாவது,
கடந்த வாரம் ஏமனின் 5வது நடவடிக்கையாக டெல் அவிவ் நகரம் தாக்கப்பட்டது. இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோமோ, அது நடந்துள்ளது. எங்கள் இலக்கு அடையப்பட்டு விட்டது. இனி தொடர்ந்து, டெல் அவிவ் நகரம் தாக்கப்படும்.
சுமார் 2200 கிலோ மீட்டர் பயணித்து, எங்களது ஆள் இல்லா விமானம் டெல் அவிவை தாக்கியது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வழக்கமாக இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை வழியிலேயே தடுத்து விடுவார்கள்.
ஆனால் இந்த முறை அவர்களால் கூட இதனை தடுக்க முடியவில்லை. அதே போல் இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் தோல்வியை தழுவி விட்டன. எனவே இதுபோன்ற தாக்குதல்கள் இனி விரைவில் வர உள்ளன.
எங்களது ஹோதைதா துறைமுகம் தாக்கப்பட்டதன் மூலம் நாங்கள் ஒரு போதும் பின்வாங்கி விட மாட்டோம். காசா மக்களுக்காக எங்களது தாக்குதல்கள் இஸ்ரேல் மீது தொடரும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து நெதன்யாகு கொண்டாடப்பட்டுள்ளார். அவர்கள் நெதன்யாகுவை கொண்டாடவில்லை. குற்றம், கொடுங்கோன்மை, இனப்படுகொலை ஆகியவற்றை கொண்டாடியுள்ளனர்.
இதன் மூலம் இஸ்ரேலின் இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கு இருக்கும் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஈரானை எதிர்க்க அரபுநாடுகள் தன்னுடன் சேர வேண்டும் என நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ஒரு போதும், இஸ்ரேலை அழிக்க, ஈரான் அரபு நாடுகளை ஒன்று திரட்டவில்லை. ஈரான் அதன் சொந்த பலத்தில் நின்று போராடும். மேலும் அரபு நாடுகள் எவ்வாறு இஸ்ரேல் உடன் கைகோர்ப்பார்கள்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் உடன் அவர்கள் கை கோர்ப்பார்களா? முஸ்லீம்களுக்கு எதிராக இஸ்ரேல் உடன் அரபு நாடுகள் கை கோர்ப்பார்களா? அரபுகளுக்கு எதிராக, இஸ்ரேல் உடன் அரபு நாடுகளே கை கோர்ப்பார்களா? இது முற்றிலும் முட்டாள்தனமான பேச்சு.
இவ்வாறு ஏமன் படைகளின் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தியுள்ளார்.
===