காசா மீது 317வது நாளாக நீடிக்கும் போர்!

இஸ்ரேல் ராணுவ வாகனத்தை தகர்த்த ஹமாஸ்…
ஆக்கிரமிப்பு அதிகாரிகள் 2 பேர் பலி… மேலும் சிலர் படுகாயம்…
317வது நாளாக காசா மீது நீடிக்கும் போர்…
கடந்த 10 மாதங்களாக காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்து 74 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 92 ஆயிரத்து 537 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி கொல்லப்பட்ட நிலையில், அவர்கள் உடல்கள் இன்னும் மீட்கப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் தங்களது தாக்குதல்களை பல மடங்காக அதிகரித்துள்ளன. காசாவில் சுமார் 80 சதவீத இடங்களை போர் நடைபெறும் பகுதிகளாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த மக்களும், சுமார் 20 சதவீதம் பகுதிகளுக்குள் முடங்கியுள்ளனர்.
மருத்துவமனைகள் செயல் இழந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மட்டும் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சனிக்கிழமை நள்ளிரவு காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் விமானத்தில் இருந்து ராக்கெட் வீசியுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் சனிக்கிழமை நடத்திய பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.
ஆயுத சப்ளை பிரிவைச் சேர்ந்த, இவர்கள் இருவரும், வாகனம் ஒன்றில் ஆயுதங்களை எடுத்துச் சென்றபோது, அவர்களை குறிவைத்து, சாலையோரம் ஹமாஸ் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் அவர்களோடு சேர்த்த்து மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காசா மீதான தரை வழித் தாக்குதலில் இதுவரை தங்கள் தரப்பில், 334 பேர் பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஹமாஸ் தாக்குதலில் இதுவரை சுமார் 10 ஆயிரம் இஸ்ரேலிய படையினர், ராணுவ பணியில் இருந்து விலகியுள்ளதமாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
இவர்கள், கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் அடையும் காயம் காரணமாக ஒரு மாதத்திற்கு குறைந்தது 100 இஸ்ரேலிய படையினர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு வருவதாகவும் ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
====