காங்கிரசில் இணைந்த வினேஷ் போகட், பஜ்ரங் புனியா! இந்திய ரயில்வே எதிர்ப்பு!

பிரபல ஒலிம்பிக் வீராங்கணை வினோஷ் போகட், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று, இந்திய எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ள அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவர்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.இதனிடையே தங்களது அனுமதி இல்லாமல், இருவரும் அரசியல் கட்சியில் இணையவோ, அல்லது தேர்தலில் போட்டியிடவோ முடியாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.இரண்டு வீரர்களும், இந்திய ரயில்வேயில் அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.
அரசியலில் களமிறங்க முடிவு செய்ததால், பணியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்களது பணி விலகலை இந்திய ரயில்வே இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. சட்ட விதிகளின் படி, ரயில்வே நிர்வாகம் அதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியும்.இந்நிலையில், இந்திய ரயில்வே, பாஜகவின் முகவர்போல் செயல்படக் கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே, அரசு அதிகாரியாக இருந்து கொண்டு, அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற விதி இருக்கும் போது, நீங்கள் ஏன் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் கலந்து கொள்கிறீர்கள் என விளக்கம் கேட்டு, இரு வீரர்களுக்கும் கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கு பிறகு வெள்ளிக்கிழமை, அவர்கள் ராகுல் காந்தியை சந்தித்த நிலையில், பிறகு, தங்களது பணி விலகலை அவர்கள் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே அவர்களது விலகல் பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியானா மாநிலத்தில் ஜாட் சாதியினர் மற்றும் ஜாட் விவசாயிகள் அந்த மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது, காங்கிரசில் இணைந்துள்ள இருவரும், ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில், பாஜகவிற்கு பெரும் பின்னடைவு இந்த தேர்தலில் ஏற்படும் என கூறி வருகின்றன. இதனால் இருவரும் காங்கிரசில் இணைந்திருப்பது, அக்கட்சிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் என பலரும் ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது, இந்தியாவிற்கே உலக அளவில் பெருமை சேர்த்த 2 வீரர்கள், காங்கிரஸ் இணைவதை பாஜகாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் நெட்டிசன்கள் கருத்த தெரிவித்து வருகின்றனர்.