10 நாட்களில் 8 பள்ளிக்கூடங்கள் தகர்ப்பு – ஐ.நா. மன்றம் கடும் வேதனை!

கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் படுகொலை…
10 நாட்களில் 8 பள்ளிக்கூடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மன்றம் வேதனை…
காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் போர் 286வது நாளை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களில் 9 பள்ளிக்கூடங்கள் தகர்க்கப்பட்டு, அங்கு தஞ்சம் அடைந்திருந்த, பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா. மன்றத்தில் பேசிய பாலஸ்தீன் தூதர் ரியாட் மன்சூர், இஸ்ரேல் வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக மீண்டும் மீண்டும் காசாவில் இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. ஆனால் இந்த ஐ.நா. மன்றத்தால், எதுவும் செய்ய முடியவில்லை.
சர்வதேச சட்டங்கள், விதிகள் வெளிப்படையாக மீறப்பட்டும், இந்த அவையால் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியவில்லை. என்ன நடந்தாலும், பாலஸ்தீனியர்கள் ஒரு போதும், தங்களது உயிர் வாழும் உரிமையை, விட்டுக் கொடுத்து சரணடைய மாட்டோம்.
எங்கள் விடுதலையை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் கண்ணியத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் சுதந்திர நாட்டை பெற்றே தீருவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.