வானத்தில் எஃகு கோட்டை அமைக்கும் துருக்கி!

வானத்தில் எஃகு கோட்டை அமைக்கும் துருக்கி…
மேற்கத்திய நாடுகளை நம்பாமல் சொந்த முயற்சி…
ஆயுத இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்த எர்டோகான்..
ஐரோப்பாவின் அங்கமான துருக்கி வான் பாதுகாப்பை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மேம்படுத்தும் அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பை ஐயன் டோம் என அழைத்து வரும் நிலையில், இதற்கு ஸ்டீல் டோம் அதாவது எஃகு டோம் என்று துருக்கி பெயரிட்டுள்ளது.
இதுகுறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ஸ்டீல் டோம்கள் துருக்கியின் பெரிய நிலப்பரப்பை பாதுகாக்க உள்ளது. இது வரலாற்று முடிவு என துருக்கி துணை அதிபர் யில்மாஜ் கூறியுள்ளார்.
மேலும் உலக அமைதிக்கு துருக்கி துணை நிற்கும் எனவும் அதேவேளை நாட்டை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உறுதியாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, போதுமான வான்பரப்பு பாதுகாப்பை மேற்குலக நாடுகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டை சுமத்தியது.
இது ராஷ்யாவின் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை துருக்கி வாங்க வழிவகுத்தது. ரஷ்யாவுடனான துருக்கியின் நட்பு அமெரிக்காவிற்கு கோபத்தை தூண்டியது. இதன் விளைவாக துருக்கி உடனான F-35 போர் ஜெட் விமான திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது குறிப்படத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகளின் மூலம் மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை நம்பி இருப்பதை துருக்கி வெகுவாக குறைத்துள்ளது. கடந்த 2000 ஆண்டு 80 சதவீதமாக இருந்த வெளிநாட்டு இறக்குமதி கடந்த ஆண்டு 20 சதவீதமாக குறைத்துள்ளது.
தங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பல மில்லியன் டாலர்களை துருக்கி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2023ஆம் ஆண்டு 5.5 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஆயுத பொருட்கள் ஏற்றுமதியை அடைந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் துணை அதிபர் யில்மாஜ் கூறுகையில், பாதுகாப்பு துறை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நிற்காமல் பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்றுமதி இலக்கையும் எட்டியுள்ளது. இந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி இலக்கு 7 பில்லியன் டாலர் என தெரிவித்தார்.
====