இண்ஸ்டகிராமுக்கு தடை விதித்த துருக்கி – பாலஸ்தீன ஆதரவு கருத்தை நீக்கியதால் நடவடிக்கை!

இஸ்மாயில் ஹனியேவிற்கு இரங்கல் தெரிவித்த செய்திகள் நீக்கப்பட்டதாக புகார்….
இண்ஸ்டகிராமுக்கு தடை விதித்து துருக்கி அதிரடி நடவடிக்கை…
ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கு இரங்கல் தெரிவித்து வெளியான செய்திகளை இண்ஸ்டகிராம் தணிக்கை செய்வதாக துருக்கி புகார் தெரிவித்துள்ளது. இதனிடையே திடீரென இண்ஸ்டகிராமை பயன்படுத்த முடியாதவாறு, அந்நாட்டு தகவல் தொடர்பு துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை இயக்குநர் Fahrettin Altun கூறியுள்ளதாவது, இண்ஸ்டகிராமின் தணிக்கை நடவடிக்கை மிக தெளிவாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்போம். இதுபோன்ற சமூக வலைதளங்கள், சுரண்டல் மற்றும் அநீதிக்கான உலக கட்டமைப்பை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சேவை செய்வதற்கும் தான் உருவாக்கப்பட்டுள்ளன.
நாங்கள் பாலஸ்தீனிய சகோதரர்களின் பக்கம் நிற்கிறோம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவர்களுக்காக சேவை செய்ய முடியுமோ, அதனைச் செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். துருக்கி உயர் அதிகாரியின் இந்த கருத்தை தொடர்ந்து, இண்ஸ்டகிராம்.காம் என்ற இணையதள முகவரி, அந்நாட்டில் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மலேசிய தலைவர்களின் ஹமாஸ் இயக்கம் தொடர்பான செய்திகளை, மெட்டா நிறுவனம் நீக்கிய நிலையில், அதற்கு விளக்கம் கேட்டு, மலேசிய அரசு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
====