சவுக்கு சங்கர் மீது மொத்தம் எத்தனை வழக்குகள்? நடப்பது என்ன?

சவுக்கு சங்கர், ரெட்பிளிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டவர்கள் மீது சென்னையில் வழக்குப்பதிவு . சவுக்கு சங்கர் மீது 6 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்.
சவுக்கு மீடியா உரிமையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது அடுத்தடுத்து பல ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கோவை காவல்துறை உதவி பெண் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரிலேயே சவுக்கு சங்கர் முதன்முதலில் தேனியில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சேலத்தில் உதவி பெண் ஆய்வாளர் கீதா என்பவர் சவுக்கு சங்கர் மீது பெண்களுக்கு எதிரான பேச்சு தொடர்பாக புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே திருச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் யாஸ்மீன் என்பவர், சவுக்கு சங்கர், பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் சேனலின் ஃபெளிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சு அளித்த புகார்களின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பெண் ஊடக ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் இருந்த ராம் பிரபு மற்றும் ராஜ ரத்தினம் ஆகிய இருவரை பழனிசெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை தேனி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 கிலோ, 600 கிராம் கஞ்சா இருந்தததாக தெரிவித்துள்ளனர். அவர் கஞ்சாவை, சவுக்கு சங்கருக்கும், அவர் உடன் இருந்தவர்களுக்கும் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசார், ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வரும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சவுக்கு சங்கரை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சங்கரின் கைகளில் துணியை சுற்றி, பிளாஸ்டிக் பிவிசி பைப் மூலம் தாக்கியதாகவும், இதில் அவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் வழக்கறிஞர்கள் விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. சவுக்கு சங்கர் வழக்கு வேகம் எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.