“கோவிலில் மன்னிப்பு கேள், இல்ல 5 கோடி கொடுங்க” – சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல்!

புல்வாய் இன மானைக் கொன்றதற்காக தங்களது கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி வழங்க வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை நேற்று நள்ளிரவு தொடர்பு கொண்டு லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் எனப் பேசிய நபர், “சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினரின் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவரைக் கொன்று விடுவோம்; ங்களின் கும்பல் இப்போதும் செயல்பாட்டில் உள்ளது” எனக்கூறியுள்ளர்.
இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும், கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் மும்பை காவல்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்டோபர் 30-ம் தேதி இதேபோன்ற ஒரு கொலை மிரட்டல் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டது.
கடந்த மாதம் சல்மான் கானுடன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே சல்மானுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பிளாக்பக்ஸ் மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தங்களது புனிதமான மானைக் கொன்றதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.