ஹமாசுக்கு வைத்த குறி தப்பியது – இஸ்ரேல் படையினர் மீதே குண்டு வீசிய இஸ்ரேல் விமானம்!

ஹமாஸ் அமைப்பினர் தங்கிருந்த கட்டிடத்தை குறிவைத்து போர் விமானம் மூலம் இஸ்ரேல் படை வீசிய குண்டு, குறி தவறி, அருகே இருந்த இஸ்ரேல் படையினர் மீது விழுந்ததில், ஒருவர் பலியானதோடு, 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை காலை இஸ்ரேலின் F-15 ஆக்கிரமிப்பு போர் விமானங்கள், கான் யூனிசின் பல பகுதிகள் மீது குண்டு வீசியது. அப்போது, ஹமாஸ் படையினர் ஒரு கட்டிடத்திற்குள் இருந்து சண்டையிட்டுள்ளனர்.
அவர்களை குறிவைத்து, ஆக்கிரமிப்பு படை வானில் இருந்து குண்டு மழை பொழிந்துள்ளது.ஹமாஸ் படை தங்கிருந்த கட்டிடத்தை தாக்குவதற்கு பதிலாக, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அங்கிருந்து, 300 மீட்டர் தொலைவில், இஸ்ரேல் படையினர் தங்கிருந்த மற்றொரு கட்டிடத்தின் மீது ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் ராக்கெட்டை வீசியுள்ளன.
கீழ் தளத்தில் தங்கிருந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் மீது, கட்டிடம் சரிந்து விழுந்து நசுக்கியுள்ளது.
இதில் பாராடூருப்பர் உளவுப் பிரிவைச் சேர்ந்த 21 வயது ஆக்கிரமிப்பு அதிகாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 3 பேர் இலேசமான காயம் அடைந்துள்ளதாகவும் ஆக்கிரமிப்பு படை தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவம் அரிதான ஒன்று என்றும், தங்களது தாக்குதல்கள் பெருமளவு துல்லியமாகவே இருந்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.