மேற்குகரையிலும் நடவடிக்கைகளை விரிவுபடுத்திய பாலஸ்தீனியர்கள்!

மேற்குகரையிலும் நடவடிக்கையை விரிவுபடுத்திய பாலஸ்தீனியர்கள்….
இஸ்ரேலுக்கு புதிய நெருக்கடி…
பாலஸ்தீன நிலத்தின் ஒரு பகுதியான மேற்குகரையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு செட்டிலர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக Operation Terror of the Camps என்ற பெயரில் புதிய ஆயுத போராட்டத்தை பாலஸ்தீனிய போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து அறிவித்துள்ளன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளை பல முனைகளில் குறிவைத்து, கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளை இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை. அதே நேரம் இஸ்ரேலின் ஆள் இல்லா விமானத் தாக்குதல், விமானத் தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த புதிய நடவடிக்கைகள் குறித்து லெபனான் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள, ஹமாசின் பொலிட் பீரோ உறுப்பினர் ஹுசாம் பர்தான், இந்த புதிய ஆயுத போராட்டம் நன்கு திட்டமிட்டு, வரையறுக்கப்பட்டு, ஒட்டுமொத்த பாலஸ்தீன அரசியல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சம்மதத்தின் பேரில் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு முக்கிய காரணமே, காசா விவகாரம் அல்ல என்றும் மேற்குகரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும், இஸ்ரேல் மேற்கு கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தாக்குதல்கள், ஆகியவை தான் முக்கிய காரணங்கள் என விளக்கியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் கூட, காசாவை விட மேற்குகரையை சேர்ந்தவர்களே அதிகம் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மேற்குகரையில் புதிய நடவடிக்கைகளை பாலஸ்தீனியர்கள் தொடங்கி இருப்பதன் மூலம், இஸ்ரேல் மேலும் ஒரு புதிய போர் முனையை எதிர்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காசா இதற்கு முன்பு முழுவதுமாக ஹமாசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், மேற்குகரையோ, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தற்போது, அந்த Status quo வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாலஸ்தீன் அதிபர் மக்மூத் அப்பாஸ், உடனடியாக தனது சவுதி பயணத்தை பாதியிலேயே முறித்துக் கொண்டு, மேற்குகரை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மேற்குகரையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிடி தளர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது. மேலும் மேற்குகரையில், ஈரான் உதவியுடன் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆயுத குவிப்பு நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
=========