பாகிஸ்தான் சிறுமிக்கு சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இதயம் செயலிழந்து உயிருக்கு போராடிய பாகிஸ்தான் மாணவி -டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட இதயம்-35 லட்சம் மதிப்பிலான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொடுத்த சென்னை மருத்துவமனை
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
என்றால் போதும்.இருநாட்டு ரசிகர்கள் இடையே கார்கில் யுத்தமே தொடங்கிவிடும்.ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் சிறுமி ஒருவருக்கு சென்னையில் இலவச இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சியை சேர்ந்த ஆயிஷாரஷீத் என்ற சிறுமி சிறுவயது முதலே இதய வால்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.ஆயிஷாவின் இதயம் சிறிது சிறிதாக செயலிழந்து வருவதை அறிந்த பாகிஸ்தான் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக இந்தியா அல்லது கனடா நாட்டில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர்.
இதனிடையே சென்னையின் மருத்துவ சிகிச்சைகளை அறிந்த அச்சிறுமியின் தாய் சனோஃபர் இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.
தங்களுடைய முதல் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் முயன்று அச்சிறுமியும் சிறுமியின் தாயும் இந்தியா வந்தடைந்தடைந்தனர்.கடந்த 2019ஆம் ஆண்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள MGM Healthcare மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிறுமி ஆயிஷா.
அங்கு நடைபெற்ற பரிசோதனையில் சிறுமியின் இதயம் செயலிழந்து உள்ளதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக எக்மோ சிகிச்சை மூலம் இதயத்துடிப்பை சீராக்கினர்.பின்னர் லண்டனின் தொண்டு நிறுவன உதவியுடன் Metranic H எனப்படும் செயற்கை இதய வால்வு சிறுமியின் இதயத்தில் பொருத்தப்பட்டது.
உடல்நிலை சீரானதும் மீண்டும் பாகிஸ்தானிற்கு திரும்பினார் சிறுமி ஆயிஷா.ஆனால் அடுத்த 2 வருடங்களில் ஆயிஷா இதயத்தின் வலதுபறம் வீக்கமடைந்து செயற்கை வால்வு சேதமடைந்தது.இதனால் உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
செய்வதறியாது திகைத்து நின்ற ஆயிஷாவின் தாய் ஷனோஃபர், சென்னை மருத்துவமனையின் உதவியை நாடினார்.பின்னர் ஆயிஷாவின் மாற்று இதயத்திற்கான தேடல் பல இடங்களிலும் தொடர்ந்தது.இறுதியாக டெல்லியில் ஆயிஷாவிற்கான இதயம் கிடைத்தது.
அறுவைசிகிச்சைக்கு சுமார் 35 லட்சம் தேவைப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ட்ரஸ்ட் மற்றும் MGM மருத்துவர்கள் சிலரின் உதவியால் அறுவைசிகிச்சைக்கான பணம் திரட்டப்பட்டது.இதனையடுத்து சென்னை வந்த சிறுமிக்கு அறுவைசிகிச்சையும் தொடங்கியது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆயிஷா தற்போது நலமுடன் உள்ளதாகவும் விரைவில் பாகிஸ்தான் திரும்புவார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.வந்தாரை வாழவைக்கும் சென்னை தற்போது வெளிநாட்டினரையும் வாழவைத்துள்ள சம்பவம் இருநாட்டினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.