இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தி – சர்வதேச நீதிமன்றம் வெளியிட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

மேற்குகரை, ஜெருசலேம் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்…
இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக உள்ளது…
சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு…
மேற்குகரை, ஜெருசலம், காசா உள்ளிட்ட பாலஸ்தீனியர்களின் நிலங்களில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற வேண்டும் என சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
உலகின் உச்சகட்ட நீதி அமைப்பான சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு, இஸ்ரேலுக்கு மாபெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனியர்கள் தங்களது நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்,அவர்களின் தண்ணீர் ஆதாரங்கள் சுரண்டப்பட்டுள்ளன. படைப் பலத்தின் மூலம் அவர்களது நாடு, பறிக்கப்பட்டுள்ளது, பாலஸ்தீனியர்களின் சுய நிர்ணய உரிமை மீறப்பட்டுள்ளது உள்ளிட்ட கருத்துக்களை சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு மேற்குகரையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும், மனித உரிமை பாதிப்புகளைச் சந்தித்த பாலஸ்தீனியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தங்களது உத்தரவுகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு, ஒரு இஞ்ச் கூட வெளியேற மாட்டோம் என நெதன்யாகு கூறியுள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள பாலஸ்தீன் அரசியல் விமர்சகர், Zainah el-Haroun இதற்கு முன்பும் சர்வதேச நீதிமன்றங்களின் எந்த உத்தரவையும் இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டும் சர்வதேச நீதிமன்றம் இதே போன்ற உத்தரவை பிறப்பித்தது. இதனால் எந்த பலனும் இல்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து, தற்போது, 7 லட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகளோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு நாடோ, இஸ்ரேலை நேரடியாக அடக்காமல், எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிப்பது வீண் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை கொண்டாடும் நிலையில் தாங்கள் இல்லை என பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காசாவிலும், மேற்கு கரையிலும் தாங்கள் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பு பகுதிகளில் அவர்கள் முதலீடுகள் செய்யத் தயங்குவார்கள் என கூறப்படுகிறது.
====