சுகபோக வாழ்க்கையை புரட்டிப்போட்ட வெள்ளம் – துபாய் அரசுக்கு பாடம்!

வெள்ள நகரமாக மாறிய உலகின் சொகுசு நகரம்-
சிறந்த பாடங்களை கற்றுக்கொண்டதாக பிரதமர் அறிவிப்பு….
வீடுகளை சரிசெய்ய 4500 கோடி ஒதுக்கீடு…
மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இதுவரை இல்லாத பேரழிவை கடந்த வாரம் சந்தித்தது.
துபாய் மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் 2 ஆண்டுகள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. அல் அய்ன் பகுதியில் மட்டும் சுமார் 259.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவை துபாய் சந்தித்துள்ளது.
இம்மழையால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 2155 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் 115 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
இம்மழையால் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மூவர் எமிரேட்ஸின் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மழை சேதங்களை கணக்கிட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சேக் முஹம்மத் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேசிய சேக் முஹம்மத், இம்மழை எங்களுக்கு சிறந்த பாடத்தை கற்றுத்தந்துள்ளது.
இதிலிருந்து மீண்டு வருவோம் என கூறினார். மேலும் குடிமக்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சமாளிக்க 4500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனிடையே பெருமழை குறித்து கருத்து தெரிவித்த எமிரேட்சின் பிரபல ஆய்வாளர் அப்துல்காலிக் அப்துல்லா, பேரிடர் மேலாண்மையில் மிகப்பெரிய குறைபாடு ஏற்பட்டுள்ளதை நாம் ஏற்றக்கொண்டாக வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மழை முதலில் ஏப்ரல் 14 அன்று ஓமனில் கொட்டிதீர்த்தது. இதில் 21 பேர் இறந்ததாக ஓமன் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
பெருமழைக்கு பிறகு துபாய் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதாக எமிரேட்ஸின் ஊடகம் தெரிவித்துள்ளது. சமீபகாலங்களில் பல மாற்றங்களை துபாய் சந்தித்துள்ளது.
சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சுகபோக வாழ்க்கைக்கான நகராக துபாய் மாறி வரும் சூழலில் இப்பெருவெள்ளம் துபாயை பாதுகாப்பில்லாத நகராக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.
=============