மதக்கலவரத்தை தூண்டிவிட்டு கல்லா கட்டிய ‘சாவா’ திரைப்படம்…!

லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான பாலிவுட் படம் ‘சாவா’. மேட்டாக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாறு குறித்து சிவாஜி சாவந்த் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படம் குறித்து ஆரம்பத்தில் குறித்து சின்ன, சின்ன சர்ச்சைகள் எழுந்தாலும், மகாராஷ்டிராவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ம் தேதி ரீலீஸ் ஆனது.
இந்தி திரையுலகின் டாப் ஸ்டார் ஹீரோ, ஹீரோயின்கள் இல்லாமல், வளர்ந்து வரும் நட்சத்திரங்களைக் கொண்டு வெறும் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், தற்போது இந்த ஆண்டுக்கான அதிக பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் செய்த படங்களின் பட்டியலில் டாப் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 37 நாட்களில் மட்டும் 775 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த சாதனையை பாராட்டும் அதே நேரத்தில் இரு மதங்களுக்கு இடையே மிகப்பெரிய கலவரத்தை தூண்டிவிட்டு, நாட்டின் அமைதியையே இப்படம் சீர்குலைத்துள்ளதை மறுப்பதற்கில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து நாக்பூரில் ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. அதாவது இந்த படத்தில் ஓளரங்கசீப்பை கொடுமையான இந்து விரோதி போல் சித்தரித்திருப்பதை கையில் எடுத்த விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகள், நாக்பூரில் மிகப்பெரிய கலவரத்தையே நடத்தி முடித்துள்ளன. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என வெடித்த போராட்டம் இறுதியில் கலவரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
சிவாஜியின் மகன் சம்பாஜி, அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்படுகிற காட்சிகள் தற்போது வெளியான சாவா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள்தான் மராத்திய தேசிய உணர்வை கொந்தளிக்க வைத்த, நாக்பூரை கலவர பூமியாக மாற்றியுள்ளது. தங்களது மன்னரை படுகொலை செய்த அவுரங்கசீப் கல்லறை, எப்படி மராத்திய மண்ணில் இருக்க முடியும்? அகற்றித்தான் ஆக வேண்டும் என்கிற கலகக் குரலுக்கு இதுதான் காரணம்.