1 மாத ஏழை குழந்தைக்கு நேர்ந்த கதி

இவர்கள் எல்லாம் மனிதர்களா இல்லை சீருடை அணிந்த மிருகங்களா என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடைபெற்றுள்ளது.சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக கூலித் தொழிலாளியை விசாரிக்கச் சென்ற போலீசார், அவரது 1 மாதமே ஆன பெண் குழந்தையை மிதித்தே கொன்றுள்ளனர்.
ஆல்வார் அருகே உள்ள ரகுநாத் கர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். கூலித் தொழிலாளியான இவரது இல்லத்திற்குள் அதிகாலையில் திபுதிபுவென காவல்துறையினர் சென்றுள்ளனர்.கட்டிலில் அவர், தனது மனைவி, ஒரு மாத பெண் குழந்தை அலிஸ்பா ஆகியோர் உடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியை கட்டிலில் இருந்து கீழே இழுத்துப் போட்டு, பிறகு, வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, கட்டிலில் இருந்து குழந்தையும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தையை ஒரு காவலர் தனது காலால் தலையில் மிதித்ததாகவும் குழந்தையின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு ஏழை முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்ததை தவிர எந்த குற்றமும் செய்யாத அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இத்தனைக்கும், அந்த குழந்தையின் தந்தை இம்ரான் மீதும் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி இருந்தும் விசாரணைக்காக மட்டுமே அவரை போலீசார் இவ்வளவு அட்டூழியங்கள் செய்து இழுத்துச் சென்றுள்ளனர்.காவல்நிலையத்திற்கு வரச் சொல்லி நோட்டீஸ் கூட கொடுக்காமல், பெண் காவலர்கள் இல்லாமல், முன் அனுமதி இல்லாமல் திபுதிபுவென நுழைந்து இவ்வளவு அட்டூழியங்களை ராஜஸ்தான் ஆல்வார் போலீசார் செய்துள்ளனர்.இந்தச் சம்பவத்திற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சைபர் வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை பணம் பெற்றுக் கொண்டு விடுவிக்கும் போலீசார், கிடைக்கும் அப்பாவிகளை தண்டிப்பதாகவும், இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவலர்கள் மீதும் உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது