அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்!

திடீர் வெள்ளத்தில் சிக்கிய மனைவி, குழந்தைகள்…
குடும்பத்தை காப்பாற்ற ஒரு தந்தையின் போராட்டம்…
அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்…
வெள்ளத்தில் சிக்கிய தனது குழந்தைகள், குடும்பத்தினரை காப்பற்ற ஒரு தந்தை எடுத்த முயற்சி கடைசியில் சோகத்தில் முடிந்த காட்சிகள் கண்ணீரை வரவலைக்கும் வகையில் அமைந்துள்ளன.
video : https://fb.watch/t2zQifr-Zd/
முழுக்க முழுக்க அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே லோனாவாலா என்ற இடத்தில் புஷி நீர் தேக்கம் அமைந்துள்ளது. இதன் பின் பகுதியில் உள்ள அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று புனேயைச் சேர்ந்த அன்சாரி என்பவரின் குடும்பத்தினர் அங்கு சென்றுள்ளனர்.
ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வந்த நிலையில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் கரைக்கு வர முயற்சித்த நிலையில், சில நொடிகளில் தண்ணீரின் வேகம் மேலும் அதிகரிக்க, அவர்கள் செய்வதியாது, நடுத் தண்ணீரில் சிக்கினர். அப்போது, 2 ஆண்கள், ஒரு பெண் மற்றும் சிறுவர்கள், குழந்தைகள் 6 பேர் என மொத்தம் 9 பேர் தண்ணீரில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் தண்ணீரின் வேகம் மேலும் அதிகரித்து, அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை தனது குழந்தைகளை காப்பற்ற தன்னால் ஆன அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் கண்ணீரை வரவலைக்கின்றன.
எனினும் காட்டாற்று வெள்ளத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குடும்பத்தினர் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். எனினும் 36 வயது பெண் மற்றும் 4 சிறுவர் சிறுமியர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனிடையே இந்த சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த ஊர் நிர்வாகம் கைவிரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தான் அஜாக்கிரதையாக இருப்பதாக அவர்கள் மீது பழியை போட்டுள்ளது நிர்வாகம். அந்த ஆற்றுப்பகுதியில் கடந்த 6 மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன்பு பல சம்பவங்கள் இது போன்று நடைபெற்றும் கூட அரசு நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அன்று ஒரே நாளில் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர்.
அப்படி இருந்தும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறும் போது, அங்கு காவல்துறையோ, மீட்புப் படைகளை சேர்ந்தவர்களோ யாரும் இல்லை. எனவே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற இடங்களுக்குச் செல்லும் போது, தங்களது பாதுகாப்பை தாங்கள் தான் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.
====