கைவிடப்பட்ட பூனைக்குட்டியைக் காப்பாற்றிய நாய்… காண்போரை மெய் சிலிரிக்க வைக்கும் வீடியோ…!

மனிதர்களை விட பிற உயிர்களை நேசிப்பதில் விலங்குகள் முதன்மையானதாக உள்ளன. தன் இனத்தை மட்டுமல்ல பிற இனத்தைச் சேர்ந்த விலங்குகளையும் ஆதரிக்கும் வீடியோ அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாவது உண்டு. தற்போது நாய் குட்டி ஒன்று, தெருவில் சுற்றித்திரிந்த பூனைக்குட்டியை அன்போடும், அரவணைப்போடும் தான் வளர்த்து வரும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ காண்போர் மனதை நெகிழ வைத்து வருகிறது.
‘நேச்சர் இஸ் அமேசிங்’ என்ற டைட்டிலுடன் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் மழை பொழியும் சாலையில் தனியாக தவிக்கவிடப்பட்ட பூனைக்குட்டி ஒன்று தன்னை காப்பாற்ற யாருமே இல்லையா? என சத்தமிட்டு அலைகிறது. அப்போது அருகேயுள்ள வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய் ஒன்று, வேக வேகமாக ஓடி அந்த பூனைக்குட்டியை அன்போடு அரவணைக்கிறது. அதுமட்டுமின்றி பூனைக்குட்டி மழையில் நனையாமல் இருக்க, அதனை பாதுகாப்பாக தனது வீட்டிற்கு அழைத்து வருகிறது. பொறுமையோடும் அக்கறையோடும் அந்த நாய், சின்ன பூனைக்குட்டிக்கு காண்பித்த கருணை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
பரபர வாழ்க்கையால் மனித நேயம், கருணை, அன்பு, பாசம் போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இத்தருணத்தில் இனம் தாண்டி, பகைமை கடந்து நாய்க்குட்டி ஒன்று பூனைக்குட்டியை காத்திருப்பது சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.