
“சில நொடிகள் சுதாரித்திருந்தால் தப்பி இருப்பார் ஆம்ஸ்ட்ராங்…”
காரில் இருந்த கை துப்பாக்கியை எடுக்க முடியாத சூழல்…!
நாட்டு வெடி குண்டுகளுடன் வேறு திட்டத்தையும் வைத்திருந்த கும்பல்….
ஆம்ஸ்ட்ராங் தனது காரில் உரிமம் பெற்ற கை துப்பாக்கியை வைத்திருந்த நிலையில், சில நொடிகளுக்கு முன் அவர் சுதாரித்திருந்தாலும் கூட கொலைகார கும்பலை வேட்டையாடியிருப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கொலைக்கார கும்பலின் மற்றொரு திட்டமும் காவல்துறை விசாரணையில் தெரியவந்து, அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
அயனாவரம் கே.எச். ரோடு பகுதியில் உள்ள அப்பார்மெண்ட் ஒன்றில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோவில் தெருவில், புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். கடந்த வாரம் அந்த வீட்டை பார்வையிட வந்துள்ளார்.
பிறகு சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த இடத்திற்கு மீண்டும் வந்துள்ளார். அப்போது 7 மணியளவில் தான் இந்தச் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அவரது அன்றாட நடவடிக்கைகளை ஆட்டோ ஓட்டுநர் என்ற போர்வையில் குற்றவாளி திருமலை என்பவர் வேவு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் அங்கு வருவதற்கு முன்பே, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல், கொலை கும்பலைச் சேர்ந்த 3 பேர் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் கூகுள் மேப்பை தங்களது போனில் பார்த்தவாறு, வேலையில் இருப்பது போல் பாசாங்கு செய்துள்ளனர்.
அவர்களின் முதுகில் உணவு டெலிவரிக்கான பெரிய BAG இருந்துள்ளது. அதில் அவர்கள் அரிவாள் மட்டுமின்றி நாட்டு வெடிகுண்டுகளையும் வைத்திருந்தனர்.இந்த நிலையில் சாதாரண உடையில் அங்கு வந்த 3 பேரில் ஒருவர் ஆம்ஸ்டராங்கை நெருங்கி “அண்ணா” என அழைத்த நிலையில், பின்னால் இருந்து ஒரு நபர் முகத்தில் வெட்டியுள்ளார். மற்றொரு நபர் கணுக்காலில் வெட்டியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் உடல் வலிமை மிக்கவர் என்பதோடு, சில பயிற்சிகளையும் பெற்றவர் என கூறப்படுகிறது. இதனால், கொலைக் கும்பலை அவர் திருப்பித் தாக்கி விடுவார் என்பதால், கணுக்காலை குறிவைத்து இரண்டாவது வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து, அவர் சரிந்த நிலையில், அந்த 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிய போது, அவரை மீட்பதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், வீரமணி, கார் டிரைவர் அப்துல் கனி, நண்பர் பாலாஜி ஆகியோர் அங்கு ஓடி வந்துள்ளனர்.
அவர்கள் 3 பேரையும் அந்த கும்பலைச் சேர்ந்த மற்ற 3 பேர் சரமாரியாக வெட்டி, கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தள்ளியுள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் மீது பல இடங்களில் வெட்டி, அவர் உடல் அசைவின்றி ஆனதற்கு பிறகே, அந்த 6 பேர் கும்பல் அங்கிருந்து, தப்பி ஓடியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் தனது காரில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கின்றார். அந்த கும்பல் வருவதை அவர் சில நிமிடங்களுக்கு முன்பு யூகித்திருந்தால் கூட, தனது கைத்துப்பாக்கியை எடுத்து, அந்த கும்பலை துவம்சம் செய்திருப்பார் என கூறப்படுகிறது.
அதே நேரம் அந்த கும்பல், மிகவும் நுணுக்கமாக செயல்பட்டதாக தெரிகிறது. அதாவது ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி வைத்திருப்பதை முன்னரே அறிந்த அந்த கும்பல், ஒரு வேலை அவர் துப்பாக்கியை எடுத்தால், அதனை எதிர்கொள்ளும் வகையில், நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இதனை அவர்கள் பிளான் B ஆக வைத்திருக்கிறார்கள்.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் காரில் இருந்து தொலைவில் இருந்ததால், அவரிடம் துப்பாக்கி இல்லாததை உறுதி செய்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்திற்கு அரசியல், சாதி, மத பின்னணி காரணங்கள் இல்லை என போலீசார் கூறி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான புண்ணை பாலா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
=====