மிச்சர் கடையில் தொடங்கிய தொழில் ஒரு ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 9000 கோடி

சாதாரண மிச்சர் கடையில் தொடங்கிய ஹல்திராம்ஸ் நிறுவனம்…இன்று அதன் மதிப்பு 83ஆயிரம் கோடி ரூபாய்…
ஒரு ஆண்டு வருமானம் மட்டும் 9000 கோடி ரூபாய்…நாட்டாமை படத்தில் மிச்சர் காமெடியை வைத்தாலும் வைத்தார்கள், தமிழ்நாட்டில் மிச்சர் என்றாலே, கேலியும் கிண்டலும் தான். ஆனால் மிச்சரை வைத்து ஒரு இளைஞர், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவர் பெயர் தான் Ganga Bishan Agarwal.
பாலைவன பூமியான ராஜஸ்தானின் பிகானீரில் மிச்சர் கடை நடத்தி வந்தவரின் மகன் தான் இந்த Ganga Bishan Agarwal.மிச்சரில், பூந்தி, நிலக்கடலை என எதுவும் கலக்காமல், பூஜியா மட்டும் தயாரித்து விற்பது வட இந்தியாவில் அன்று வழக்கத்தில் இருந்தது.கடலை மாவு மூலம் இந்த மிச்சரை தயாரிப்பார்கள். இதனை பார்த்த கங்கா பிசன் அகர்வால், அதில் ஒரு புதுமையை புகுத்தினார். அதாவது, கடலை மாவுக்கு பதிலாக தமிழில் நரிப்பயறு என சொல்லப்படும் பயரை கலந்து தயாரிக்கத் தொடங்கினார். இந்த நரிப்பயறு, மழை இல்லாத பாலைவன பகுதிகளில் நன்கு வளரும்.
எனவே அந்த பயறு அதிக அளவில் கிடைக்க அதை வைத்து புஜியாவை தயாரிக்கத் தொடங்கினார். அதன் சுவை வாடிக்கையாளர்களை ஈர்த்தது.மணப்பாறை முறுக்கைப் போல், அந்த புஜியா தயாரிப்பு குடிசை தொழிலாக இருந்த நிலையில், கங்கா பிசன் அகர்வால், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். கொல்கத்தா, டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தனது கடையை திறக்கத் தொடங்கினார்.
ஹல்திராம்ஸ் என்ற நிறுவனம் புகழ்பெறத் தொடங்கியது. இதனையடுத்து, புஜியாவை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கத் தொடங்கினார்.அது இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகத் தொடங்கியது. புஜியாவில் இருந்து படிப்படியாக பல காரம் மற்றும் இனிப்பு வகைகளை தயாரித்து, சந்தைப்படுத்த தொடங்கினார்.தொழில் மளமளவென வளர்ந்து தற்போது, 87 ஆண்டுகளை அந்த நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. அவரது குடும்பத்தின 3ஆம் தலைமுறை வாரிசுகள் தற்போது, இந்த நிறுவனத்தை கவனித்து வருகின்றனர்.
அதன் தற்போதைய மதிப்பு சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய். ஒரு ஆண்டு வருமானம் மட்டும் 9000 கோடி ரூபாய்.
இந்த ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை சுமார் 42,500 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Blackstone Inc மற்றும் மேலும் 2 நிறுவனங்கள் கூட்டாக முன்வந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவில் இது தான் மிகப்பெரிய உணவுத்துறை ஒப்பந்தம் என கூறப்படுகிறது.
பிகானீர் நகரத்தில் மாஸ்டராக இருந்து, உச்சம் தொட்ட கங்கா பிசன் அகர்வாலால் ஈர்க்கப்பட்டு, பலரும் அங்கு பிகானீர் புஜியாவை தயாரித்து சந்தைப் படுத்த தொடங்கிவிட்டனர்.சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் புஜியா தயாரிக்கும் வேலையில், அந்த நகரத்தில் ஈடுபட்டுள்ளனர்.நம் ஊரில் ஒரு தெருவில் புதிதாக ஒரு டீக்கடை தொடங்கி, அது நன்றாக வியாபாரம் ஆனால், அதே இடத்தில் அடுத்தடுத்து டீக்கடைகள் உருவாகும் அல்லவா, அதைப் போன்றது தான் இதுவும்.