ஏமன் மீதான தாக்குதல் – இஸ்ரேலுக்கு உதவவில்லை என சவுதி விளக்கம்!

ஏமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை…
தங்கள் வான் எல்லையை இஸ்ரேல் பயன்படுத்தவில்லை என சவுதி அரேபியா விளக்கம்…
ஏமன் மீது இஸ்ரேல் 25 போர் விமானங்கள் மூலம் நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 80 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அரபு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டைத் தாக்க வேண்டும் என்றால், சவுதி அரேபியாவின் வான் வழியை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதனால் இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கியதா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், தங்களது வான் வழியை எந்த நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்த தாங்கள் அனுமதிக்கவில்லை என சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.
சவுதி அரேபியாவின் வான் வழியைத் தான் இஸ்ரேல் விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. இதனால் தாக்குதலுக்கும் பயன்படுத்தியதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து சவுதி பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர், பிரிகேடியர் டர்க்கி அல் மாலிக்கி கூறியுள்ளதாவது, ஹோதைததா நகரம் தாக்கப்பட்டதில், சவுதிக்கு எந்த தொடர்போ, ஈடுபாடோ கிடையாது என விளக்கியுள்ளார்.
மேலும் சவுதி வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதல் பிராந்திய அமைதியை சீர்குலைத்துள்ளது என்றும் காசா போர் முடிவுக்கு வருவதை, அடியோடு தகர்த்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு, அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுத்து பிராந்திய மக்களை காப்பாற்ற வேண்டும் என சவுதி அழைப்பு விடுத்துள்ளது.
====