முஸ்லீம்களின் 3வது புனித தலம்! முதல் கிப்ளா! பைத்துல் முகத்தஸ்க்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் அமைச்சர்!

உலக இஸ்லாமியர்களின் 3வது புனிதலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல்…
அத்துமீறி நுழைந்து, யூதர்களுக்கு வழிபாட்டு உரிமை கேட்ட இஸ்ரேல் அமைச்சர்…
மயான அமைதியில் அரபு அண்டை நாடுகள்…
இஸ்லாமியர்களின் முதல் கிப்ளா பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் ஆகும். அதாவது, உலக இஸ்லாமியர்கள் தற்போது, சவுதி அரேபியாவின் மக்கா நகரத்தில் உள்ள காபாவின் திசையை நோக்கியே தொழுகை நடத்தி வருகின்றனர். இது நபிகள் நாயகத்தின் வழிமுறை.
ஆனால் நபிகள் நாயகம் முதன்முதலாக பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கித் தான் தொழுகை நடத்தினார்கள். அதனால் பைத்துல் முகத்தஸ் முதல் கிப்ளா என அழைக்கப்படுகிறது. மேலும் நபிகள் நாயகம் அங்கிருந்து தான் புனித விண்ணேற்ற பயணம் மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி பல இறைத்தூதர்களின் வாழ்விடமாகவும், அடக்கத்தலமும் பைத்துல் முகத்தஸ் இல் இருப்பதாக இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது.
இதனால் மக்கா, மதினா நகரத்தையடுத்து, இஸ்லாமியர்களின் 3வது பெரிய புனித தலமாக பைத்துல் முகத்தஸ் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அங்கு புனித பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த தலம் தற்போது, அல் அக்சா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. எனினும் இது கிழக்கு ஜெருசலம் பகுதியில் அமைந்துள்ளது.
இது அமைந்துள்ள நிலப்பகுதி தற்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவர்களின் அனுமதியின் பேரிலேயே அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். யூதப் படையினர் திடீரென அனுமதி மறுக்கும் போது, அங்கு தொழுகைக்கு செல்ல முடியாது.
இந்த நிலையில் அண்மையில் இஸ்ரேல் போலீசாரின் அனுமதியுடன் ராணுவ பாதுகாப்புடன் அங்கு நுழைந்த வலதுசாரி அமைச்சர் பென் கிவிர் என்பவர், அந்த அல் அக்சா பள்ளியில் தற்போதைய சூழல் அதாவது status quo மாற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அந்த இடத்தை முழுக்க முழுக்க யூதர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அங்கு யூதர்கள் வழிபடலாம் என்றும் பேசினார்.
இது பாலஸ்தீனியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கம் போல் சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து போன்ற அண்டை அரபு சன்னிப்பிரிவு முஸ்லீம் நாடுகள் வெற்று அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன.
அதே நேரம் இஸ்லாமியர்களின் புனித தலத்தில் யூதர்கள் வழிபடுவது மதத்திற்கு எதிரானது என இஸ்ரேலின் ஆர்தோடக்ஸ் ஹரேடி யூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு, அல் அக்ஸா பள்ளிவாசலின் தற்போதைய நிலை அதாவது status quo மாற்றப்படாது என்றும், அங்கு பழைய சூழலே தொடரும் என்றும் கூறியுள்ளது.
===