சிவில் தேர்வுகளில் தெலுங்கு மொழி நீக்கப்பட்டுள்ளது – தெலங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு!

இந்தியா டுடே தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்தி திணிப்பை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளதாவது,
விரும்பி இந்தி கற்கலாமே தவிர, அதனை திணிக்கக் கூடாது. பாஜக வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கிறது. பன்மொழிக் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். முதலில் இந்தி ஒரு தேசிய மொழி அல்ல. அதனை வளர்க்க மோடி பெரும்பாடு படுகிறார்.
இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக தெலுங்கு தான் பெரிய மொழி. அதனை வளர்க்க என்ன நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. சிவில் தேர்வுகளில் இருந்து தெலுங்கு மொழியை மோடி அரசு அகற்றியுள்ளது.
தெலுங்கிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பேசும் மொழியான வங்காளியும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலம் இந்தியர்களுக்கு தாய் மொழி அல்ல. இருந்தாலும் ஏன் ஆங்கிலத்தை போட்டி போட்டுக் கொண்டு படிக்கிறோம். அதன் மூலம் வர்த்தகத்தில், வேலைவாய்ப்பில் வளர முடியும் என்பதால் தான். எனவே தேவையின் அடிப்படையிலேயே ஒரு மொழி வளரும். திணிப்பதால் வளராது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.