அப்பாவுக்கு அடுத்து மகனுமா?… நெல்லை முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசேன் மகன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 18ம் தேதி நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் பிஜிலி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிகாலையில் ரம்ஜான் தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், நிலத்தகராறு காரணமாக அவரைக் கொன்றதாக கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபிக், அவரது தம்பி கார்த்திக், தெளபிக் மனைவியான நூர்ஜகானின் தம்பி அக்பர் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலைஞர் கருணாநிதிக்கு பாதுகாவலராக இருந்த ஜாகீர் உசேனின் மரணம் குறித்த பரபரப்பே அடங்காத நிலையில், அவரது மகனான இஜூர் ரஹ்மான் பிஜிலி பகீர் கிளப்பும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று ஹெல்மெட் அணிந்திருந்த நபர் ஒருவர் எங்களது வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஜாகீர் உசேன் இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு கும்பல் தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அப்பாவைப் போலவே மகனும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளது நெல்லையில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.