சல்மான் கானைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கானுக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.இதனால் இருவருக்கும் Y+ லெவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் வந்தது நாம் அறிந்ததே. புல்வாய் இன மானைக் கொன்றதற்காக தங்களது கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி வழங்க வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவரை கர்நாடகாவில் வைத்து போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
அப்பாடா தொல்லை விட்டுச்சி..என்பது போல் பாலிவுட் திரையுலகினர் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆம், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு நேற்று கொலை மிரட்டல் வந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சத்தீஸ்கர் மாநிலம்..ராய்ப்பூரில் இருந்து அழைப்பு விடுத்த நபர் தன்னை ஒரு ஹிந்துஸ்தானி என அடையாளப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஷாருக்கானை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
போன் நெம்பரை வைத்து விசாரணை நடத்திய போலீசார், சத்தீஸ்கரைச் சேர்ந்த பைசான் கான் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட்டின் டாப் ஹீரோக்களான சல்மான் மற்றும் ஷாருக்கானுக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து இருவருக்கும் Y+ லெவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.