செங்கோலுக்கு சிக்கல் – தலைவணங்காத மோடி! கண்டுபிடித்த எதிர்கட்சிகள்!

கடந்த மோடி ஆட்சியின் போது, சோழர்காலத்து செங்கோல் என்று கூறி, தங்க பட்டைகளால் சுற்றப்பட்ட, 5 அடி நீளம் கொண்ட செங்கோல் ஒன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. பின்னர் அது சோழர் கால செங்கோல் அல்ல, சென்னை உம்மிடி பங்காரு நகைக்கடையில் செய்யப்பட்ட செங்கோல். சோழர்கள் கால கலாச்சாரத்தை நினைவுகூறும் விதமாக நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.செங்கோல் குறித்து சர்ச்சைகள் வட்டமிடுவதற்கு முக்கிய காரணம், இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், மன்னர் ஆட்சியின் சின்னமான செங்கோலுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது தான்.இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் 37 உறுப்பினர்களை கொண்ட, 3வது பெரிய கட்சியான சமாஜ்வாதி கட்சி, செங்கோலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ஆர்.கே. சவுத்ரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, நாம் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளம் தான் அரசியலமைப்பு சாசனம். பாஜக அரசு கடந்த ஆட்சியின் போது, சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை வைத்தது. மன்னர் ஆட்சி காலங்களுக்கு பின்னர் தான் நாம் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டோம். தற்போது இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம், நம் நாட்டு குடிமக்களான ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனி இந்த நாட்டை செங்கோல் ஆள வேண்டுமா? அல்லதுஅரசியலமைப்புச் சட்டம் ஆள வேண்டுமா? செங்கோல் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் நகல் புத்தகம் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த எம்.பி. கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு எதிர்கட்சிகள் இடையே பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது, கடந்த முறை மோடி செங்கோலை, நாடாளுமன்றத்தில் நிறுவியபோது, அந்த செங்கோல் முன்பு தலை வணங்கினார். ஆனால் தற்போது, அவர் செங்கோலை வணங்காமல், அரசியலமைப்புச் சட்டத்தை வணங்கியுள்ளார். எனவே எங்கள் எம்.பி. செங்கோல் குறித்து மோடிக்கு நினைவுபடுத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கூறியுள்ளதாவது, செங்கோல் என்பது சர்வதிகார மன்னராட்சியின் அடையாளம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். மன்னராட்சி காலங்கள் முடிவுக்கு வந்து விட்டன. நாம் கொண்டாட வேண்டியது மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சாசன சட்டங்களைத் தான். எனக் கூறியுள்ளார்.சமாஜ்வாதி கட்சியின் கருத்தின்படி, நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோல் அகற்றப்பட வேண்டும் என லாலு பிரசாத் யாதவின் மகளான, ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மிஷா பாரதியும் கருத்து தெரிவித்துள்ளார்.