காசா மக்களுக்காக குரல் கொடுத்த துணிச்சல் நடிகை சமந்தா!

பாலஸ்தீனியர்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல், அதன் உச்சகட்டமாக ரபா அகதிகள் முகாமை தீக்கிரையாக்கியது. இதில் பெண்கள், குழந்தைகள், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சூழலில், தமிழ் நடிகையான சமந்தா, இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, ரபா, தல் அல் சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் கற்பனை செய்ய முடியாதவை. முகாம்கள் கொளுந்து விட்டு எரிகின்றன. அங்கு ஹமாஸ் அமைப்பு இருந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அங்கு அப்பாவி பெண்கள் குழந்தைகள் இருந்ததாக, மனிதநேய தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. பெண்களும், குழந்தைகளும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.ரபா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பிறகே இது நடைபெற்றுள்ளது.
இந்த கொடூரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற எங்கும் செல்ல முடியாது. இந்த கொடூரங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை.காசா தாக்குதல் தொடங்கி 7 மாதங்கள் ஆகும் நிலையில், முதல் முறையாக பிரபல தமிழ் நடிகையான சமந்தா இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.