பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு நேரத்தில், இஸ்ரேலின் கோலன் படைப்பிரிவு ராணுவக் கல்லூரி மீது ஹிஸ்புல்லா வீசிய ஆள் இல்லா விமானம், அந்த மையத்தை நாசமாக்கியது. இதில் 58 இஸ்ரேல் ராணுவத்தினர் காயம் அடைந்துள்ளனர். 4 பேர் பலியாகினர். 7 பேர் கவலைக்கிமான நிலையில் உள்ளனர்.இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானங்களை தடுக்க முடியாமல், ஐயன் டோம்கள் தோல்வி அடைந்து வருவது அம்பலமானது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு பதிலடி எனக் கூறி லெபனான் மீது பல்வேறு வான் வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகளை பெருமளவு அழித்து விட்டதாகவும், குறிப்பாக, ஆள் இல்லா விமானங்கள் வைக்கப்பட்டிருந்த, கிடங்கை அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த தகவல்களை குப்பையில் எறிந்துள்ள ஹிஸ்புல்லா, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்களிடம் இன்னும் பல ஆண்டுகளுக்கு போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள் உள்ளதாகவும், அவற்றில் சில நவீன ஆயுதங்களை காட்சி படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில் முதன் முறையாக, ஆள் இல்லா விமானங்களில் பொருத்தப்படும், ராக்கெட்டுகளையும் ஹிஸ்புல்லா காட்சிப்படுத்தியுள்ளது.ஈரானில் இருந்து சிரியா வழியாக தொடர்ந்து ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், உள்நாட்டிலும் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.