ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

லடாக் பிராந்தியத்தில், டெல்லி அளவுக்கு மிகப்பெரிய நிலப்பகுதியை, இந்தியாவிடம் இருந்து சீனா ஆக்கிரமித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி கூறியுள்ளதாவது, லடாக்கில் இந்திய நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது பெரும் பேரழிவு. எந்த ஊடகமும் இதுபற்றி எழுதுவதற்கு விரும்பவில்லை. 4000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை அமெரிக்காவிடம் இருந்து வேறு ஒரு நாடு பறிக்க முடியுமா? அப்படி பறித்தால் அமெரிக்கா என்ன செய்யும்?
இப்படி ஒரு சம்பவம் நடந்தால், அதற்கு பிறகு, அமெரிக்காவின் அதிபரை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் இந்தியாவில் மோடி, இந்த விவகாரத்தை சரியாக கையாண்டதாக மக்களை நம்பவைத்துள்ளார்.
மோடி சீனாவை சரியாக எதிர்கொள்ளவில்லை.
இந்திய நிலப்பகுதியில் சீன ராணுவம் அமர்ந்திருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. இந்தியாவில், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும், பாஜக, ஆர்எஸ்எஸ் தரப்புக்கும் இடையே ஒரு கருத்தியல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. இரண்டு தரப்புக்கும் உள்ள பார்வை முற்றிலும் வேறுபட்டது. நாங்கள் பன்முகத் தன்மையை வலியுறுத்துகிறோம். இந்திய மக்கள் அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பது எங்கள் கொள்கை. மதம், மொழி, இன ரீதியான பாரபட்சங்களை எதிர்க்கிறோம். இவ்வாறு ராகுல்காந்தி பேசியுள்ளார்.