எல்லோரும் சமம் – ரூ. 2.5 கோடியை வேண்டாம் என்ற ராகுல் டிராவிட்! இப்படியும் ஒரு மனிதரா?

உலகக் கோப்பை டி20 தொடரில் வெற்றி பெற்றதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி பரிசு…
உதவி பயிற்சியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தையே தனக்கும் வழங்கினால் போதுமானது என அறிவிப்பு…
கைக்கு வந்த இரண்டரை கோடி ரூபாயை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த ராகுல் டிராவிட்…
தனக்கு சம்பளமாக வந்த 5 கோடி ரூபாயில், பாதி தொகை மட்டும் போதும் என மீதி தொகையை பிசிசிஐ அமைப்புக்கே ராகுல் டிராவிட் திருப்பிக் கொடுத்த நிகழ்வு நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. அதாவது தலைமைப் பயிற்சியாளரான தனக்கும், பிற உதவி பயிற்சியாளர்களுக்கும் ஒரே சம்பளம் போதுமானது என்றும், தனக்கு மட்டும் அதிக சம்பளம் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்றதையடுத்து, அணிக்கு 125 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மகம்பேரி, பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருக்கு தலா 2.5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சக பயிற்சியாளர்களை விட தனக்கு ஒரு மடங்கு அதிக பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், அதனை அமைதியாக ஏற்றுக்கொள்ளாமல், அனைவரும் சமம் என்ற கொள்கையோடு செயல்பட்டுள்ளார் ராகுல் டிராவிட்.
பிற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று தனக்கும் 2.5 கோடி வழங்கினால் போதுமானது என அறிவித்துள்ளார்.
இதனை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். என்னதான் பிரபலமாக இருந்தாலும், வருடத்திற்கு எத்தனை கோடி சம்பாதித்தாலும், மேலும் மேலும் சம்பாதிக்க துடிக்கும் பெரிய மனிதர்கள் மத்தியில், தனித்துவத்தை காட்டியுள்ளார் ராகுல் டிராவிட். இது முதல் முறை அல்ல.
கடந்த 2018ஆம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. அணி வீரர்களுக்கு 30 லட்சம் ரூபாயும், உதவி பயிற்சியாளர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் டிராவிட், அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றார். இதனையடுத்து, ராகுல் டிராவிட் உட்பட அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது.
====