பக்ரீத் பண்டிகையையொட்டி, பல நூறு கோடிக்கு விற்பனையாகும் ஆடுகள் – பயனடையும் ஏழை இந்திய விவசாயிகள்!

ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி எனப்படும் பலி கொடுப்பது வழக்கம். இந்தியாவில் பெரும்பாலும் ஆடு, மாடுகள் குர்பானி செய்யப்படுகின்றன.
இதற்காகவே நாடு முழுவதும் விவசாயிகள், பக்ரீத் பண்டிகையையொட்டி, ஆடு, மாடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் பெரிய அளவில் விவசாயிகள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டும், நாடுமுழுவதும் ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் களைகட்டி வருகிறது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேடு, வாரச் சந்தையில் விற்பனை செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.பரபரப்பாக நடைபெற்ற சந்தையில், 75 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பல வகையான ஆடுகள் விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்தன.
சந்தையின் முடிவில் சுமார் 1000 ஆடுகள் விற்கப்பட்டன. இதன் தோராய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி, பல நூறு கோடி ரூபாய்க்கு ஆடுகள், மாடுகள் விற்பனையாகியுள்ளன.
இதன்மூலம் ஆடு, மாடு வளர்ப்பை மட்டுமே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
கிராமங்களை விட்டுவிட்டு பெரு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருவதால், பெரு நகரங்களில் உள்ள நிலச் சுவான்தாரர்களே பெரிதும் பயனடைகின்றனர். அங்கு குவியும் ஏழை, எளிய தொழிலாளிகள், படித்த இளைஞர்கள் பல துயரங்களை அனுபவிக்கின்றனர். உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். எனவே மக்களுக்கு அவர்களது சொந்த கிராமங்களில் உருவாகும் வேலைவாய்ப்புக்களே நிரந்தர தீர்வுகளைத் தரும்.இதனையொட்டி, பல படித்த இளைஞர்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பை நோக்கி திரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.