இஸ்ரேலுக்கு எந்த ராணுவ வெற்றியும் இல்லை – பாலஸ்தீன் போராளிக்குழு!

களத்தில் இஸ்ரேலுக்கு எந்த வெற்றியும் இல்லை என பாலஸ்தீன் குழு அறிவிப்பு…
தோல்வியை மறைக்கவே பொதுமக்களை ஆக்கிரமிப்பு படை கொல்வதாக விளக்கம்…
காசா முழுவதும் இனப்படுகொலைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருவதோடு, போராளிக்குழுக்களை மிகப்பெரிய அளவில் ஒடுக்கி வருவதாக கூறி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் ராணுவ பிரிவான அல்குத்ஸ் படைப்பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இஸ்ரேல் படைகளை பாலஸ்தீன் போராளிக்குழுக்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அல் சுஜேயா பகுதியில் ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போராளிகளை ஒன்றும் செய்ய முடியாததால், தங்களது ராணுவ தோல்விகளை மறைக்க பொதுமக்களை கொன்று குவித்து, தங்களை பலசாலிகளாக இஸ்ரேல் காட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆக்கிரமிப்பு படைகள் மீது, பல இடங்களில் பல முனைத் தாக்குதல்களை நடத்தி, விரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
காசா மக்கள் அடைந்த துயரங்களுக்கு ஒரே தீர்வு பாலஸ்தீன விடுதலை தான் என்றும், அதனை அடையும் வரை தங்களது போர் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன குழுக்கள் இன்னும் இஸ்ரேலை எதிர்க்க முழு பலத்துடன் உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
====