இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு வேண்டாம் – கணவரை இழந்த ராணுவ அதிகாரியின் மனைவி!
திருமணம் முடிந்து தேனிலவுக்கு சென்றிருந்த போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வலும் ஒருவர்.
இவருக்கு திருமணம் முடிந்து தேனிலவுக்கு சென்றிருந்த போது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரிகள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வினய் நர்வலின் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில் “இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீர் மக்கள் மீதான வெறுப்புகளை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு வேண்டாம். அமைதியும் நீதியுமே எங்களுக்கு வேண்டும் ” என அவர் தெரிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கணவரை இழந்த நிலையிலும், நிதானத்துடன், சமூக அமைதியை விரும்பும் அவரது கருத்து, பாரட்டுதல்களை பெற்றுள்ளது.