வெளியிடப்பட்ட புதிய வீடியோ!

இஸ்ரேலுக்குள் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ ஒன்றை ஏமன் படைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இனி எதிரிகளுக்கு தரையிலும் அதிர்ச்சி அளிப்போம் என ஏமன் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி கூறி இருந்தார். இந்த நிலையில் ஏமன் ஆயுதப் படைகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளன. அதில், சுரங்கத்திற்குள் இஸ்ரேலை தாக்க திட்டமிடுவது போன்றும், பிறகு, கார்களில் அணிவகுத்துச் சென்று, இஸ்ரேல் எல்லையில் உள்ள சுவர்களை தகர்த்துக் கொண்டு உள்ளே செல்வது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.வழக்கமாக சீனா, வடகொரியா, இஸ்ரேல் நாடுகள் இதுபோன்ற சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுவார்கள்.
ஹிஸ்புல்லாவும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளது.இந்த சூழலில் ஏமன் ஆயுதப்படைகள் இஸ்ரேல் மீது தரை வழியாக சென்று தாக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.ஏமனில் கடந்த 10 மாதங்களாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் இஸ்ரேலுக்கு எதிரான பிரமாண்ட பேரணி, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த போராட்டங்களின் நோக்கம்.
ஏமன் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தான், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கையை தொடங்குவதாக ஏமன் படைகள் அறிவித்தன.இந்த நிலையில் 48வது வாரமாக கடந்த வெள்ளிக்கிழமை உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்ட போராட்டங்கள் ஏமன் முழுவதும் நடைபெற்றன.ஏமன் நாட்டில் உள்ள 70 முக்கிய நகரங்கள் உட்பட 363 இடங்களில் இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. சில ஆயிரம் படை வீரர்களை மட்டுமே வைத்திருந்த ஹவுத்திக்கள் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை படையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் ஏமன் படைகள் வெளியிட்டுள்ள வீடியோவில், ஏமன் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி உத்தரவிட்டால், தரை வழியாக ஏமனுக்குள் புக தயாராக உள்ளதாகவும், அரபு நாடுகள் தங்கள் எல்லையை திறக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எல்லையை தகர்த்துக் கொண்டு உள்ளே செல்வோம் என்றும் அவர்களது வீடியோவில் தெரிவித்துள்ளனர்.இதனால் அரபு பிராந்தியத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல ஹவுத்தித் தலைவர்கள் சவுதி அரேபியாவிற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளதால், மன்னர் சல்மானின் குடும்பத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.