புதிய அப்டேட்

கடந்த ஓராண்டு கால இஸ்ரேல் – காசா போரில், முதன் முறையாக பெரும் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு படைகள் எதிர்கொண்டன. ஆக்கிரமிப்பு கோலானி படைப்பிரிவு தளத்தை குறிவைத்து, ஹிஸ்புல்லா அனுப்பிய ஆள் இல்லா விமானம் இலக்கை துல்லியமாக தாக்கியதில், 4 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 58 ராணுவத்தினர், தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை தளபதி, ஹெர்சி ஹலேவி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் அவர், தாக்குதலுக்கு ஆளான ராணுவ மையத்தை பார்வையிடும் வீடியோவை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதே நேரம் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர் அங்கு இருந்தாரா, இல்லையா, எங்கு இருந்தார் போன்ற எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதே போல் ஆக்கிரமிப்பு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார்.இந்தத் தாக்குதல் குறித்து, அப்பகுதி ஆக்கிரமிப்பு பொதுமக்களில் ஒருவர் கூறும் போது, நான் கடந்த 2 வருடமாக இந்த ராணுவ தளத்துக்கு அருகே ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறேன். இது ஒரு ராணுவத் தளம் என்றோ, பயிற்சி கல்லூரி என்றோ எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு ரகசியமாகத் தான் இந்த தளம் செயல்பட்டு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் விரைந்தன. பிறகு ஊடகங்களைப் பார்த்து தான், அங்கு மிகப்பெரிய ராணுவ பயிற்சி கல்லூரி இருப்பதையே தெரிந்து கொண்டேன். இந்த விபரம் எப்படி ஹிஸ்புல்லா அமைப்புக்கு தெரிந்தது, அவர்கள் எப்படி துல்லியமாக இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதை நினைக்கும் போது, ஆச்சர்யமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.