போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரம் – திடீர் முட்டுக்கட்டை போட்ட நெதன்யாகு!

இஸ்ரேலின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்…
ஆனாலும் தொடர்ந்து, முட்டுக்கட்டை போடும் நெதன்யாகு…
போர் நின்றால் பதவிக்கு ஆபத்து நேரும் என அச்சம்…
இந்த உலகம் பல சர்வதிகாரிகளை பார்த்திருந்தாலும், அவர்கள் அனைவரையும் விஞ்சும் சர்வதிகாரியாக உருவெடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என ஒரே நோக்கத்தில், ஒவ்வொரு நாளும் பலநூறு பெண்கள், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகி வருகின்றார்.
நிரந்தர போர் நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் ஆகிய 2 முக்கிய நிபந்தனைகளை ஹமாஸ் தளர்த்திக் கொண்டுள்ளது. அமெரிக்கா இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்றுக் கொண்டு, போர் நிறுத்தத்திற்கு முன் வந்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்புகளான, மொசாத், சின்பெட் போன்ற அமைப்புகளின் தலைவர்கள், எகிப்து, கத்தார் நாடுகளின் உளவுத்துறை அதிகாரிளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். ஹமாஸ் தரப்பு நியாயங்களை எகிப்து, கத்தார் அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளிடம் எடுத்து வைப்பார்கள்.
இந்த நிலையில், போர் நிறுத்தப்பட்டால், உடனடியாக அது தனது பதவிக்கு ஆபத்தாக முடிந்து விடும் என அஞ்சும் பெஞ்சமின் நெதன்யாகு, மீண்டும் பொருத்தமில்லாத 4 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது, கைதிகள் பரிமாற்றம் முடிந்த உடன் மீண்டும் காசாவை தாக்குவோம், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிப்போம் என அந்த நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஹமாஸ் அமைப்பை, பேச்சுவார்த்தையில் இருந்து, வெளியேறச் செய்ய வேண்டும் என்பதற்கான சதித் திட்டமாக பார்க்கப்படுகிறது. நெதன்யாகுவின் இந்த திடீர் நிபந்தனையை இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவரான யாயிர் லாபித் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.
நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள, பேச்சுவார்த்தைகளை முறிக்க சதித்திட்டம் தீட்டுகிறார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
=====