பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- பறிபோன உயிர் – மங்களூருவில் துயரச் சம்பவம்
கேரளாவைச் சேர்ந்த அஸ்ரப் என்ற இளைஞர் 10க்கும் மேற்பட்ட நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்

கர்நாடகாவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” எனக்கூறியதாக இளைஞர் ஒருவர் அடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகில் உள்ள கிராமம் குடுப்பு.இக்கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரின்போது இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது இளைஞர் ஒருவரை பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறியதாக கூறி கும்பல் ஒன்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர் கடுமையான ரத்தப்போக்கினால் உயிரிழந்தார்.பின்னர் போலிசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இளைஞர் கேரளாவை சேர்ந்த அஸ்ரப் என்பது தெரியவந்தது.
தாக்குதல் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களூர் காவல் ஆணையர் அனுபம் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கு இயற்கைக்கு மாறான மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் முக்கிய குற்றவாளியான சச்சின் என்பவரை கைது செய்துள்ளதாகவும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து பேட்டி அளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா “சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியதாக இளைஞரை கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. தாக்குதலில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வழக்கு விசாரனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 பிரிவு 103(2) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இப்பிரிவின்படி குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.